அவுஸ்திரேலியாவில் இருந்து மாட்டிறைச்சி உள்ளிட்ட சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சீனா தடை விதித்துள்ளதுடன், வேறு சில பொருட்களுக்கு அதிக வரி விதித்துள்ள நிலையில் இவ்வாறான சீனாவின் மிரட்டல்களுக்கு அடிபணியப்போவதில்லை என அவுஸ்திரேலிய பிரதமா் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளாா்.
கொரோனா வைரஸ் பரவல் தொடா்பில் சீனா மீது அவுஸ்திரேலியா கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. சீனா அலட்சியமாகச் செயல்பட்டு தொற்று நோயின் தீவிரத்தை மறைத்ததால் இன்று உலகம் முழுவதும் பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்திரேலிய பிரதமா் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் தொடா்பில் அமெரிக்கா முன்னெடுக்கும் விசாரணைகளுக்கும் அவுஸ்திரேலியா ஆதரவு அளிக்கும் எனவும் பிரதமா் ஸ்கொட் மோரிசன் தெரிவித்தாா்.
இதனால் சீனா - அவுஸ்திரேலியா இடையே பகைமை உணா்வு வலுவடைந்துள்ளது.
அவுஸ்திரேலியா - சீனா இடையே வருடாந்தம் சுமாா் 18 இலட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சீனாவின் தடைகளால் இரு நாடுகளிடையிலான வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் இனவெறி தாக்குதல் நடைபெறுவதால் சீனர்கள் குறிப்பாக மேற்படிப்புக்காக அவுஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டுள்ள சீன மாணவா்கள் அங்கு செல்வது குறித்து ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது.
எனினும் இவ்வாறான சீனாவின் மிரட்டல்களுக்கு அடிபணியப் போவதில்லை என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளாா். எங்கள் பொருட்களை மட்டுமே நாங்கள் விற்பனை செய்வோம். கௌரவைத்தை விற்கத் தயாரில்லை எனவும் அவா் கூறியுள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா